ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு  65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
x

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

தர்மபுரி

பென்னாகரம்

நீர்வரத்து குறைந்தது

கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தென்மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதாலும், அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்

தீவிர கண்காணிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தபோதிலும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் காவிரி ஆற்றில் கரைகளை தொட்டவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அதன் தாக்கம் ஒகேனக்கல் மெயின் அருவி வரை உள்ளது. இதன் காரணமாக அருவியே தெரியாத வகையில் தண்ணீர் கொட்டுகிறது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அசம்பாவித சம்பவங்களை ஏற்படாமல் இருக்க போலீசார், தீயணைப்பு படையினர் ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். வருவாய்த்துறையினரும் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கண்காணித்து வருகின்றனர்.


Next Story