மயிலாடுதுறை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு


மயிலாடுதுறை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு
x

மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் தேவாரம், திருவாசகம் பாடி தமிழில் அர்ச்சனை செய்து சனிக்கிழமை வழிபாடு நடத்தினர்.

மயிலாடுதுறை:

தமிழக அரசு கடந்த ஆண்டு "அன்னைத் தமிழில் அர்ச்சனை" என்ற திட்டத்தை அறிவித்தது. ஆனாலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல், தற்போதும் அனைத்துக் கோவில்களிலும் சமஸ்கிருதத்திலேயே அர்ச்சனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் தமிழ்மொழி வழிபாட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை தமிழுக்காக 1965-ஆம் ஆண்டு மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த நாளான செப்டம்பர் 3-ஆம் தேதி நடைமுறைப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியினருக்கு வலியுறுத்தியிருந்தார்.

அதனடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தேவாரம் திருவாசகம் பாடி தமிழ்வழி அந்தணர்களால் சிவ வழிபாடு செய்யப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில், மயிலாடுதுறை தொகுதி செயலாளர் அழகப்பன், தொகுதி தலைவர் சசிகுமார் மற்றும் நீதிராஜன், சுரேஷ்குமார், ஜார்ஜ் பீட்டர் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, தேவாரம், திருவாசகம் பாடி தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.


Next Story