கடலில், படகுகள் மோதல்; மீனவர் சாவு


கடலில், படகுகள் மோதல்; மீனவர் சாவு
x

கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகுகள் மோதிக்கொண்டதில் மீனவர் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகுகள் மோதிக்கொண்டதில் மீனவர் உயிரிழந்தார்.

மீன்பிடிக்க சென்றனர்

நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 58), அதே பகுதியை சேர்ந்த எல்லப்பன்(46), முருகவேல்(40) ஆகிய 3 மீனவர்களும் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் தங்கியிருந்து மீன்பிடித்து வந்தனர்.

இந்த 3 மீனவர்களும் மல்லிப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் மதியம் பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 12 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

விசைப்படகு மோதியது

அப்போது அந்த வழியாக வந்த நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த அனிதா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு எதிர்பாராதவிதமாக பைபர் படகு மீது மோதியது.

இதனால் பைபர் படகு சேதம் அடைந்து கடலில் மூழ்க தொடங்கியது. படகில் இருந்த ராஜேந்திரன், எல்லப்பன், முருகவேல் ஆகியோர் கடலில் குதித்து 1 மணி நேரமாக தத்தளித்து கொண்டிருந்தனர்.

மீனவர் சாவு

இதனைத்தொடர்ந்து மோதிய விசைப்படகு மீண்டும் அங்கு வந்து அதில் இருந்த மீனவர்கள், கடலில் தத்தளித்து கொண்டிருந்த 3 மீனவர்களையும் மீட்டனர். இதில் ராஜேந்திரன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து ராஜேந்திரன் உடலையும், மீனவர்கள் 2 பேரையும் கோடியக்கரை கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து பைபர் படகு உரிமையாளர் எல்லப்பன், வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

கோடியக்கரையில் இருந்து மீன்துறை அலுவலர் நடேச ராஜா ஏற்பாட்டில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 2 படகுகளில் சென்று கவிழ்ந்த பைபர் படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உயிரிழந்த ராஜேந்திரனுக்கு முத்துலெட்சுமி, வெற்றிக்கனி என்ற 2 மனைவிகள். 7 குழந்தைகள். இதில் முதல் மனைவி முத்துலெட்சுமி இறந்து விட்டார்.

விசைப்படகு மோதியதில் மீனவர் உயிரிழந்த சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story