ஏற்காடு மலை அடிவாரத்தில்மான், முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைதுநாட்டு துப்பாக்கி பறிமுதல்


ஏற்காடு மலை அடிவாரத்தில்மான், முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைதுநாட்டு துப்பாக்கி பறிமுதல்
x

ஏற்காடு மலை அடிவாரத்தில் மான், முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்

சேலம்,

மான், முயல் வேட்டை

சேலம் ஏற்காடு அடிவாரத்தில் குரும்பப்பட்டி பூங்கா உள்ளது. வனத்துறைக்கு சொந்தமான இந்த பூங்காவின் அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் சிலர் மான், முயல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷசாங் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சேர்வராயன் தெற்கு வனச்சரகர் முரளிதரன் தலைமையில் வனவர் பழனிவேல் மற்றும் வனக்காப்பாளர்கள் அசோக்குமார், அருண்குமார், செல்வசேகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் மாலை காப்புக்காடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காப்புக்காட்டிற்குள் 2 பேர் கம்பி வலைகளை கட்டிக்கொண்டு நாட்டு துப்பாக்கியுடன் மான், முயல் வேட்டையில் ஈடுபட்டு வருவதை பார்த்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

அதில், செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 29), பச்சியப்பன் (51) என்பதும், இவர்கள் புள்ளிமான், முயல், காட்டுப்பூனை போன்ற வனவிலங்குகளை வேட்டையாட வந்திருப்பதும் தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து சங்கர், பச்சியப்பன் ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, வலை, அரிவாள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 2 பேர் மீது சேர்வராயன் தெற்கு வனச்சரகத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சேலம் 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story