தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 11 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றம்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 11 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றம்
x
தினத்தந்தி 10 July 2023 6:45 PM GMT (Updated: 11 July 2023 9:08 AM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 11 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள்

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனுதாக்கல் செய்தது.

இதை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஸ்டெர்லைட் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றவும், ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவதற்கு அனுமதி அளித்தது.

குழு அமைப்பு

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக, தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு ஆலையில் இருந்து கழிவுகளை அகற்ற அனுமதி அளித்தனர்.

11 ஆயிரம் டன் ஜிப்சம் அகற்றம்

அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்த ஜிப்சம் கழிவுகளை கடந்த மாதம் 23-ந்தேதியில் இருந்து லாரிகளில் ஏற்றி, பல்வேறு சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். இதுவரை ஆலையில் இருந்து 289 லாரிகள் மூலம் 11 ஆயிரத்து 171 டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன.

இந்த பணிகளை உதவி கலெக்டர் தலைமையிலான குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆலையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


Next Story