வேலை வாய்ப்பு பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்


வேலை வாய்ப்பு பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
x

வேலை வாய்ப்பு பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

விளையாட்டு வீரர்கள்

தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கீழ்க்காணும் விளையாட்டு போட்டிகளில் 1.1.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகளோ தகுதியுடையதாக கருதப்படும். சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், பங்கேற்றவர்கள் தகுதியானவர்கள்.

சாம்பியன்ஷிப் போட்டிகள்

அதன்படி கோடை கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (ஐ.ஒ.சி.) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் (ஐ.எஸ்.எப்.) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை ஐ.ஒ.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட ஐ.எஸ்.எப்.-ன் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம், காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்கள்.

40 வயதிற்கு உட்பட்டவர்கள்...

அதன்படி தேசிய விளையாட்டு போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள். மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்கள். அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருத்தப்படும்.

மேலும் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும். விண்ணப்பதாரர் வேலை வாய்ப்பு பெற்றிடுவதற்கான இதர முழு தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும். எனவே பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மேற்காணும் வழிகாட்டுதலின்படி 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வருகிற 31-ந்தேதிக்குள்...

தகுதியான விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் வருகிற 31-ந்தேதி மாலை 5 மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரியிலோ அல்லது சென்னை நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் நேரிலோ அல்லது பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை 7401703516 (பெரம்பலூர்), 7401703499 (அரியலூர்) என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கற்பகம் (பெரம்பலூர்), ஆனிமேரி ஸ்வர்ணா (அரியலூர்) ஆகியோர் தொிவித்துள்ளனர்.


Next Story