இடையக்கோட்டை பகுதியில்தக்காளி விளைச்சல் அமோகம்


இடையக்கோட்டை பகுதியில்தக்காளி விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 12 Feb 2023 6:45 PM GMT)

இடையக்கோட்டை பகுதியில் தக்காளி அமோக விளைச்சல் அடைந்துள்ளது.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, சின்னக்காம்பட்டி, வாடிப்பட்டி, கொ.கீரனூர், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், பொருளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளைச்சல் அடையும் தக்காளிகளை ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி மற்றும் காமராஜர் மாா்க்கெட்டுகளில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

தற்போது இடையக்கோட்டை பகுதியில் தக்காளி அமோக விளைச்சல் அடைந்துள்ளது. விளைச்சல் அடைந்த தக்காளியை விவசாயிகள் தரம் பிரித்து மார்க்கெட்டுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு வியாபாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட பெட்டி தரத்திற்கு ஏற்றவாறு ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது. அதை வாங்கும் வியாபாரிகள் மதுரை, சிவகாசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளாவிற்கும் அனுப்பி வருகின்றனர். வழக்கத்தைவிட அதிகளவு தக்காளி விளைச்சல் அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் அதிகளவு தக்காளி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. அவை தற்போது நன்கு விளைச்சல் அடைந்துள்ளது. தக்காளியை இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு வசதியாக ஒட்டன்சத்திரத்தில் குளிர்பதன கிட்டங்கி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்


Next Story