ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x

பெரும்பாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள், அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடிவிட்டனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை சுமார் 3.15 மணியளவில் இந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.

அந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக பெரும்பாக்கம் ரோந்து வாகன போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு

ஏ.டி.எம். மையத்தின் உள்ளே சென்று பார்த்தனர். அதில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்து இருப்பது தெரிந்தது. அதிகாலையில் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கப்பட்டுள்ள பகுதியின் கதவை உடைத்து திறக்க முயன்றபோது, அலாரம் ஒலித்ததால் பயந்துபோய் தப்பியது தெரிந்தது.

இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் தப்பியது. இதையடுத்து ஏ.டி.எம். மையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.


Next Story