விவசாயி மீது தாக்குதல்


விவசாயி மீது தாக்குதல்
x

தேவதானப்பட்டி அருகே விவசாயியை தாக்கிய 11 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

தேவதானப்பட்டி அருகே உள்ள சிந்துவம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 34). விவசாயி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், தனது மகளுக்கு காதணி விழா நடத்தினார். இதில் தேனியை அடுத்த குன்னூரை சேர்ந்த அவரது மைத்துனர்கள் மாயவன், கருப்பையா ஆகியோர் சீர்வரிசை பொருட்களை மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். சிந்துவம்பட்டி மெயின் ரோட்டில் ஊர்வலம் வந்தது.

அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த, அதே ஊரை சேர்ந்த மகேஷ் மீது மேளதாளம் அடித்து வந்த குழுவை சேர்ந்த ஒருவர் மோதியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை மாயவன், கருப்பையா ஆகியோர் சமாதானம் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பாண்டியராஜன், சிந்துவம்பட்டியில் உள்ள மண்டுக்கல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மகேஷ் மற்றும் அதே ஊரை சேர்ந்த அழகுராஜா, தசரதன், வடிவேல், தங்கப்பாண்டி உள்பட 11 பேர் பாண்டியராஜனிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். இதனை தடுக்க முயன்ற மாயவனுக்கும் அடி விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த 2 பேருக்கும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மகேஷ் உள்பட 11 பேர் மீது, ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story