விவசாயி மீது தாக்குதல்


விவசாயி மீது தாக்குதல்
x

முன்விரோதத்தில் விவசாயியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள தெற்கு அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). விவசாயி. அய்யலூர் அருகே உள்ள மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர்கள் 2 பேரும் உறவினர்கள். கருப்பசாமிக்கும், அவரது தங்கை தனத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்தது. இந்த விஷயத்தில் கருப்பசாமிக்கு ஆதரவாக, ராமசாமி இருப்பதாக தனம் கருதினார். இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மாமரத்துப்பட்டிக்கு ராமசாமி வந்திருந்தார். இதையறிந்த தனம் தனது, உறவினர்களுடன் சென்று ராமசாமியிடம் தகராறு செய்தார். தகராறு முற்றிய நிலையில், தனம் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து ராமசாமியை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த ராமசாமி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ராமசாமி புகார் செய்தார். அதன்பேரில் தனம், அவரது உறவினர்கள் பழனிவேல், தீபக் (24), பார்த்தசாரதி ஆகிய 4 பேர் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்தார். இதில் தீபக்கை போலீசார் கைது செய்தனர்.


Next Story