பெண்ணை கொலை செய்ய முயற்சி


பெண்ணை கொலை செய்ய முயற்சி
x
தினத்தந்தி 8 Jun 2023 6:45 PM GMT (Updated: 8 Jun 2023 6:45 PM GMT)

கடலூரில், மகன் கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி, பெண்ணை கொலை செய்ய முயன்ற 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

கொலை வழக்கு

கடலூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி ராஜம் (வயது 57). அதே ஊரை சேர்ந்தவர் இளங்கோ மகன் தங்கபாண்டியன் என்ற ஏழுமலை (27). இவர்கள் 2 குடும்பத்திற்கும் கடந்த 28.2.2021 அன்று ஏற்பட்ட தகராறில் ராஜம் மகன் பிரபுவை தங்கபாண்டியன் உள்பட 3 பேர் அடித்துக்கொலை செய்து விட்டதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தங்கபாண்டியன் ரவுடி பட்டியலிலும் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கபாண்டியன், அவரது நண்பரான மற்றொரு ரவுடி கம்மியம்பேட்டை ராஜேந்திரன் மகன் சதீஷ் என்ற ஹரிதாஸ் (21) ஆகிய 2 பேரும் ராஜம் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த அவரிடம் பிரபு கொலை வழக்கில் சாட்சி சொல்ல போகக்கூடாது என்று தடுத்து, ஆபாசமாக திட்டி, மானபங்கப்படுத்தியதாக தெரிகிறது.

2 பேர் கைது

தொடர்ந்து நீ சாட்சி சொல்ல சென்றால் உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டி, கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதில் அவர் விலகி ஓடியதால், அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலி சேதமடைந்து விட்டதாக தெரிகிறது. இது பற்றி ராஜம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியன், சதீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story