தாலுகா அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி


தாலுகா அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
x

விருத்தாசலத்தில் பட்டா மாற்றம் செய்து தரக்கோரி தாலுகா அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

கம்மாபுரம் அருகே சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சடகோபன் மனைவி தெய்வநாயகி (வயது 60). இவருடைய மகள் ராஜேஸ்வரியை, நெய்வேலி அருகே உள்ள கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு விஜய பிரபாகரன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் தெய்வநாயகியின் கணவர் சடகோபன் உயிரிழந்து விட்ட நிலையில், அவர்களுக்கு சொந்தமான 3½ ஏக்கர் நிலத்தை, மருமகனான வேலாயுதம், ஏமாற்றி தனது மகன் பெயரில் பட்டா மாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை ஏமாற்றி பட்டா மாற்றியதை அறிந்த தெய்வநாயகி தனது பெயரில் பட்டா மாற்றம் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்தார்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றுவரும் ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு நேற்று வந்த தெய்வநாயகி, அதிகாரிகள் பட்டா மாற்றம் செய்யாமல் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி கதறி அழுததோடு, தான் கொண்டு வந்த மண்எண்ணையை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி எறிந்தனர். அதைத்தொடர்ந்து ஜமாபந்தி அலுவலர் செல்வபாண்டியன், தாசில்தார் தனபதி மற்றும் அதிகாரிகள்,தெய்வநாயகியிடம் உங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து தெய்வநாயகி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story