இறைச்சி கடைக்காரர் வீட்டில் திருட முயற்சி

தேனி அருகே இறைச்சி கடைக்காரர் வீட்டில் மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே கொடுவிலார்பட்டி திருமலை நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவர் திருப்பூரில் இறைச்சிக் கடை வைத்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் திருப்பூருக்கு சென்றார். இந்நிலையில் அவருடைய வீட்டு காவலாளி போஸ் என்பவர் வீட்டுக்கு வந்தபோது மாடி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் சுப்பிரமணிக்கு தகவல் கொடுத்தார். சுப்பிரமணி உடனடியாக தேனிக்கு வந்து வீட்டை பார்வையிட்டார். அப்போது வீட்டின் கதவு, படுக்கை அறை கதவு உடைக்கப்பட்டு இருந்ததாகவும், பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை என்றும் தெரியவந்தது. மேலும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது நள்ளிரவில் வீட்டை நோட்டமிட்டபடி 2 பேர் சென்றது பதிவாகி இருந்தது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






