மகள்-மகனுடன் பெண் தீக்குளிக்க முயற்சி


மகள்-மகனுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 13 Feb 2023 7:00 PM GMT (Updated: 13 Feb 2023 7:00 PM GMT)

கடத்தி செல்லப்பட்ட கணவரை மீட்டு தரக்கோரி மகள், மகனுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான மக்கள் மனு கொடுக்க வந்தனர். அவ்வாறு மனு கொடுக்க வந்த மக்களை, கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சிறுமி, சிறுவனுடன் ஒரு பெண் மனு கொடுக்க வந்தார். திடீரென்று அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை வெளியே எடுத்தார்.

அதை பார்த்த போலீசார் பெட்ரோல் கேனை பறிக்க முயன்றனர். அதற்குள் அந்த பெண் தனது உடலிலும், சிறுவன் மற்றும் சிறுமியின் மீதும் பெட்ரோலை ஊற்றினார். நல்லவேளையாக தீக்குளிக்கும் முன்பு 3 பேரையும் போலீசார் தடுத்து மீட்டனர். மேலும் 3 பேர் மீதும் தண்ணீரை ஊற்றினர். பின்னர் நடத்திய விசாரணையில் தீக்குளிக்க முயன்றவர்கள், திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்த வேளாங்கன்னிராஜ் என்பவரது மனைவி குழந்தைதெரசு (வயது 45), அவருடைய மகள் ரிவினாமேரி (16), மகன் ஸ்டீபன் (11) என்பது தெரியவந்தது.

கணவர் கடத்தல்

மேலும் குழந்தைதெரசு போலீசாரிடம் கூறுகையில், நானும் எனது கணவரும் திண்டுக்கல் அருகே உள்ள ஒரு செங்கல்சூளையில் வேலை செய்தோம். அந்த செங்கல்சூளை உரிமையாளரிடம் முன்பணம் வாங்கி இருந்தோம். அதில் பாதி பணத்தை கொடுத்து விட்டோம். இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி திண்டுக்கல்லை அடுத்த கல்லுப்பட்டியில் எனது கணவரை சிலர் தாக்கி கடத்தி சென்று விட்டனர். 20 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் எனது கணவரை விடுவிக்கவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விரக்தியில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதாக அவர் கூறினார்.

இதையடுத்து அவருக்கு உரிய அறிவுரை கூறி முறையாக மனு கொடுக்கும்படி போலீசார் அனுப்பி வைத்தனர். கணவரை மீட்டு தரக்கோரி குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story