நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருட முயற்சி


நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருட முயற்சி
x

குடியாத்தத்தில் தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்தது. விபூதி, குங்குமம் தூவி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தத்தில் தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்தது. விபூதி, குங்குமம் தூவி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருட முயற்சி

குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடியாத்தம் ஜி.பி.எம். தெருவிலும், மேல்ஆலத்தூர், செருவங்கி உள்ளிட்ட பகுதிகளிலும் பூட்டிய வீட்டுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் குடியாத்தம் அம்பாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று காலை வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதில் விபூதி மற்றும் குங்குமம் தூவப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த மேஜை டிராயர் மற்றும் பீரோவை திறக்க முயற்சி செய்துள்ளனர். அதனை திறக்க முடியாததால் அதிலிருந்த பணம் தப்பியது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பீரோவை திறக்க முடியாததால் பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போகாமல் தப்பியதால் நிதி நிறுவனத்தினரும், போலீசாரும் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் இரவு ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்ட நிலையிலும் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story