ஆடி கடைசி வெள்ளியையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் தரிசனம்


ஆடி கடைசி வெள்ளியையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 12 Aug 2023 2:35 AM IST (Updated: 12 Aug 2023 3:36 PM IST)
t-max-icont-min-icon

ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

ஈரோடு

ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

ஆடிவெள்ளி

ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதம் ஆகும். அந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். அதன்படி நேற்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். ஒரு சில பக்தர்கள் கூழ் ஊற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். பெண்கள் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

தங்க கவச அலங்காரம்

சூளை அங்காள பரமேஸ்வரி அம்மன் மஞ்சள் கயிறு அலங்காரத்திலும், எல்லைமாரியம்மன், கருங்கல்பாளையம் மாரியம்மன், தெப்பக்குளம் வீதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் தங்க கவச அலங்காரத்திலும், கருங்கல்பாளையம் தேவி மாரியம்மன் சந்தன காப்பு அலங்காரத்திலும், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், காவிரி ரோடு சின்ன மாரியம்மன் வளையல் அலங்காரத்திலும், பெரியவலசு முத்துமாரியம்மன் வெள்ளி கவச அலங்காரத்திலும், அசோகபுரம் மலைமாரியம்மன் சந்தன காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதேபோல் கள்ளுக்கடைமேடு பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில், சூரம்பட்டி பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவில் உள்பட மாநகர் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story