பண்ருட்டி ஆட்டோ டிரைவர் கொலை சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்காதலி விஷம் குடித்து தற்கொலை முயற்சி பரபரப்பு தகவல்கள்


பண்ருட்டி ஆட்டோ டிரைவர் கொலை சம்பவத்தை தொடர்ந்து  கள்ளக்காதலி விஷம் குடித்து தற்கொலை முயற்சி    பரபரப்பு தகவல்கள்
x

பண்ருட்டி ஆட்டோ டிரைவர் கொலை சம்பவத்தை தொடர்ந்து. அவரது கள்ளக்காதலி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்


பண்ருட்டி,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் நேற்று பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் சென்ற பஸ்சில் ஏறி பயணம் செய்துள்ளார். அந்த பஸ் மதியம் விழுப்புரம் பஸ் நிலையத்தை சென்றடைந்த போது, அந்த பெண் திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.

உடன் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, இளம் பெண் விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் வீடியோ

இந்நிலையில் இளம்பெண் விஷம் குடித்தது தொடர்பாக விழுப்புரம் மற்றும் பண்ருட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், திடுக்கிடும் தகவல் வெளியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண், திருமணம் ஆனவர். இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிடுவதில் ஆர்வமாக இருந்து வந்தார். இதன் மூலம் அவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

இதற்கிடையே இளம் பெண், இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை விட்டு பிரிந்து வந்த இளம் பெண், தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் பண்ருட்டியில் உள்ள ஒரு பேக்கரியிலும் வேலை பார்த்து வருகிறார்.

ஆட்டோ டிரைவர் கொலை

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இவரை பண்ருட்டி கனத்து மேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுமன்(26) என்பவரும் பின் தொடர்ந்தார். இதில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்தி நகர் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவரும், சுமனின் நண்பரான சக்திவேல் என்பவரும் இளம் பெண்ணுடன் பழக தொடங்கினார். சக்திவேலுக்கு திருமணமாகிவிட்டது. இளம் பெண்ணுடன் இருவருக்குமான கள்ளக்காதலில் சுமனுக்கும், சக்திவேலுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இது தொடர்பாக கடந்த 9-ந்தேதி சுமன், சக்திவேல் தரப்பினர் சந்தித்து சமதானம் பேசினர். அப்போது ஏற்பட்ட மோதலில் சுமன் தரப்பினர் சக்திவேலை கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுமன் உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் விசாரணை

சக்திவேலின் கொலை சம்பவத்தை தொடர்ந்து இளம் பெண் பதற்றத்துடன் காணப்பட்டுள்ளார். மேலும் தனது தாய் வீட்டுக்கும் அவர் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்த அவர், விஷத்தை சாப்பிட்டுவிட்டு பஸ் ஏறி விழுப்புரத்துக்கு சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story