கடலூர் அருகே, ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: என்.எல்.சி. தொழிலாளி உள்பட 2 பேர் கைது


கடலூர் அருகே, ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: என்.எல்.சி. தொழிலாளி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2022 6:45 PM GMT (Updated: 11 Oct 2022 6:46 PM GMT)

கடலூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த என்.எல்.சி. தொழிலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்


தகராறு

கடலூர் அருகே உள்ள ராமாபுரம் குறவன்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சிவமணி (வயது 37). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சத்யா. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சிவமணி, கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்த உறவினரான விதவை பெண் ஒருவரின் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதில் அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் விதவைக்கும், சிவமணிக்கும் இடையே தகராறு இருந்துள்ளது.

கழுத்தை அறுத்து கொலை

இதற்கிடையில் தங்கள் ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு சிவமணியை குடும்பத்தோடு அந்த பெண் அழைத்துள்ளார். இதையடுத்து அவரும் கடந்த 9-ந்தேதி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் விதவை, அதே ஊரை சேர்ந்த என்.எல்.சி. தொழிலாளி வேல்முருகன்(30), அம்மாள்புரம் சின்னதம்பி மகன் சங்கர்(30) ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்த சிவமணியை கோவிலுக்கு ஆட்டோவில் அழைத்துச்சென்றனர்.

இதையடுத்து கிழக்குராமாபுரம் சுடுகாடு வாய்க்கால் அருகில் சென்றதும் வேல்முருகன் உள்ளிட்ட 3 பேரும் சிவமணியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விதவை பெண்ணை கைது செய்தனர்.

2 பேர் கைது

மேலும் தலைமறைவான வேல்முருகன், சங்கரை பிடிக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று பாதிரிக்குப்பம் திடல் வழியாக சென்ற வேல்முருகன், சங்கரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து கைதான வேல்முருகன் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், சிவமணியுடன் சேர்ந்து நாங்கள் 2 பேரும் மது அருந்தினோம். அப்போது சிறுமியை கர்ப்பமாக்கியது குறித்து சிவமணியிடம் கேட்டதற்கு அவர் எங்களை வெறுப்பு ஏற்றுவது போல், அலட்சியமாக பதில் கூறினார். அப்போது அங்கு வந்த விதவை பெண்ணோடு சேர்ந்து அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தோம் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story