மதுரையில் ஆவணி மூலத்திருவிழா:வாள்-கேடயத்துடன் எழுந்தருளிய சுந்தரேசுவரர்- இன்று பட்டாபிஷேகம்


மதுரையில் ஆவணி மூலத்திருவிழா:வாள்-கேடயத்துடன் எழுந்தருளிய சுந்தரேசுவரர்- இன்று பட்டாபிஷேகம்
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழவில் பாணனுக்காக சென்று அங்கம் வெட்டிய லீலைக்காக வாள்-கேடயத்துடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினார். சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடக்கிறது.

மதுரை


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழவில் பாணனுக்காக சென்று அங்கம் வெட்டிய லீலைக்காக வாள்-கேடயத்துடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினார். சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடக்கிறது.

ஆவணி மூலத்திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் சிவபெருமானின் திருவிளையாடல்களை பக்தர்களுக்கு உணர்த்தும் சிறப்பு அலங்காரங்கள் நடந்து வருகின்றன.

விழாவில் 6-ம் நாளான நேற்று காலை பாணனுக்காக சென்று அங்கம் வெட்டிய லீலை நடந்தது. அப்போது கம்பத்தடி மண்டபத்தில் வாள், கேடயத்துடன் சுந்தரேசுவரரும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர். அங்கு சுந்தரேசுவரர் வேடம் அணிந்து கோவில் பட்டர் கையில் கேடயம், வாளுடன் லீலையை நடித்து காண்பித்தார். பின்னர் இரவு சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்தனர்.

அங்கம் வெட்டிய லீலை

விழாவில் அங்கம் வெட்டிய லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-

மதுரையை ஆண்ட குலோத்துங்க பாண்டியன் காலத்தில் பாணன் என்ற வயது முதிர்ந்த வாள்வித்தை ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவருடைய சிஷ்யர்களில் சித்தன் என்பவன் மிகவும் தீய குணங்கள் கொண்டவன். பயிற்சி முடித்து சென்ற அவன் தானும் ஒரு பயிற்சி பள்ளி அமைத்தான். அங்கு தனக்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியரின் மாணவர்களையெல்லாம் அங்கு அழைத்துக்கொண்டான். மேலும் ஆசிரியரின் மனைவியிடமும் தவறாக நடக்க முயற்சி செய்தான். இதை அறிந்த பாணன், சோமசுந்தரரிடம் முறையிட்டான்.

அதனால் இறைவனும் ஆசிரியர் வேடம் தாங்கி சென்று சித்தனை வாள் போருக்கு அழைத்தார்.

ஆசான் மனைவியை நினைத்த நெஞ்சையும், பேசிய நாக்கையும், அந்த பெண்ணை தொட்ட கைகளையும், கண்ட கண்களையும் காத்துக்கொள் என்று கூறி ஒவ்வொரு அங்கமாக வெட்டினார். இறுதியில் அவனது தலையையும் வெட்டினார், இறைவன்.

இதை அறிந்த மன்னன் குலோத்துங்க பாண்டியன் ஆசிரியருக்கு தக்க மரியாதைகள் செய்து கவுரவித்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.

இன்று பட்டாபிஷேகம்

ஆவணி மூலத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம், கோவிலில் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.35 மணிக்கு மேல் நடக்கிறது. அதில் சுவாமியிடமிருந்து செங்கோலை பெற்று அவரது பிரதிநிதியாக கோவில் அதிகாரி சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வலம் வருவார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்ப்பிப்பார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


Next Story