பிளாஸ்டிக்கை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துங்கள் - பொதுமக்களுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள்


பிளாஸ்டிக்கை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துங்கள் - பொதுமக்களுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 2:12 AM GMT)

பிளாஸ்டிக்கை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துங்கள் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி


இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட நிர்வாகம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடைவிதித்துள்ளது.

இவற்றில் பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளின் தடையினை அளவு மற்றும் தடிமன் வரையறையின்றி தடையினை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது.

குற்றசெயல்

தற்போது நெய்யப்பட்ட பைகள் அல்லது ரபியன் பைகள் என்ற பெயரில் பிளாஸ்டிக் கைப்பைகளை விற்பனையாளர்கள், கடைக்காரர்கள் மற்றும் ஜவுளிகடைகள், பேரங்காடிகள், ஷாப்பிங் மால்கள் போன்ற வணிக நிறுவனங்களில் பூ, உணவு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், ஜவுளி, முதலியவைகளை விநியோகிக்க உபயோகப்படுகின்றது.

இதுபோன்ற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியப்பட்டு குப்பையாக மாறிவிடுகிறது. இவ்வாறு குப்பையாக வீசப்பட்ட பிளாஸ்டிக்குகள் ஏரிகள், ஆறுகள், கடல் போன்ற நீர்நிலைகள் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்கை தயாரிப்பதோ, விற்பனை செய்வது மற்றும் விநியோகிப்பதை தமிழக அரசின் தடை அறிவிப்பை மீறும் குற்ற செயலாகும்.

பொறுப்புள்ள குடிமகன்

ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட தடையை செயல்படுத்த வேண்டும்.

அதேபோல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் குறிப்பாக பிளாஸ்டிக் கைப்பைகளை எந்த நிலையிலும் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு, ஆதரவு தேவை என்பதனை தமிழக அரசு வலியுறுத்துகிறது.

எனவே நமது பூவுலகம் எதிர்கொள்ளும் பெரும் அச்சுறுத்தலை அகற்றுவதற்கு பொறுப்புள்ள குடிமகனாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துவோம் என உறுதிமொழியினை ஏற்று அதனை உறுதியுடன் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story