தமிழ் மொழியில் கோப்புகளை சிறப்பாக பராமரிக்கும் அலுவலகங்களுக்கு பரிசு


தமிழ் மொழியில் கோப்புகளை சிறப்பாக பராமரிக்கும் அலுவலகங்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 2 Dec 2022 7:30 PM GMT (Updated: 2 Dec 2022 7:30 PM GMT)

தமிழ் மொழியில் கோப்புகளை சிறந்த முறையில் பராமரிக்கும் அலுவலகங்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தர்மபுரியில் நடந்த ஆட்சி மொழி கருத்தரங்கில் கலெக்டர் சாந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தர்மபுரி

தமிழ் மொழியில் கோப்புகளை சிறந்த முறையில் பராமரிக்கும் அலுவலகங்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தர்மபுரியில் நடந்த ஆட்சி மொழி கருத்தரங்கில் கலெக்டர் சாந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆட்சி மொழி கருத்தரங்கு

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி கருத்தரங்கம் தர்மபுரி ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கை கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ்மொழி நம் தாய்மொழி எனவே அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் தமிழில் கையெழுத்திட வேண்டும். தமிழ்மொழி இந்திய மொழிகளில் ஒரு கம்பீரமான மொழியாகும். தமிழ் மொழியில் கோப்புகளை சிறந்த முறையில் பராமரிக்கும் அலுவலகங்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது என்றார்.

மாணவர்களுக்கு பரிசு

இதையொட்டி நடந்த பயிலரங்கில் ஆட்சிமொழி வரலாறு, சட்டம், மொழிப்பெயர்ப்பு கலைச்சொல்லாக்கம், ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும் என்ற தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது. ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், தமிழில் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல் மொழிப்பயிற்சி என்ற தலைப்புகளிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாள் விழாவையொட்டி நடந்த கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி, நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 42 பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் சாந்தி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் ஜெயஜோதி, தமிழ்ச் சங்கச் செயலாளர் சவுந்திர பாண்டியன், பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story