மண் காப்போம்' இயக்கம் குறித்து விழிப்புணர்வு: பிரான்சில் இருந்து கோவைக்கு சைக்கிளில் வந்த பெண்


மண் காப்போம் இயக்கம் குறித்து விழிப்புணர்வு: பிரான்சில் இருந்து கோவைக்கு சைக்கிளில் வந்த பெண்
x
தினத்தந்தி 30 Jan 2023 5:56 AM GMT (Updated: 30 Jan 2023 7:06 AM GMT)

மண் காப்போம்' இயக்கம் குறித்து விழிப்புணர்வுக்காக பிரான்சில் இருந்து கோவைக்கு சைக்கிளில் பெண் வந்துள்ளார்.

சென்னை,

'மண் காப்போம்' இயக்கம் குறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 50 வயதான நதாலி மாஸ், பிரான்ஸ் முதல் இந்தியா வரை 7 ஆயிரம் கி.மீ. சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் 21-ந்தேதி தனது சொந்த ஊரான பிரான்சின் டூலோன் நகரில் இருந்து புறப்பட்ட அவர் இத்தாலி, ஸ்லோவேனியா, குரோஷியா, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஐக்கிய அமீரக நாடுகள் மற்றும் ஓமன் வழியாக சைக்கிள் ஓட்டி, கடந்த மாதம் 1-ந்தேதி இந்தியாவுக்கு வந்தார். பல்வேறு மாநிலங்கள் வழியாக நதாலி மாஸ், கோவை ஈஷா யோகா மையத்துக்கு நேற்று வந்தார்.

இதுகுறித்து நதாலி மாஸ் கூறும்போது, 'மண் காப்போம் இயக்கத்துக்காக ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனிநபராக மேற்கொண்ட 30 ஆயிரம் கி.மீ. மோட்டார் சைக்கிள் பயணம்தான் எனது பயணத்துக்கான உத்வேகம்.

நான் ஜக்கி வாசுதேவை சுவிட்சர்லாந்திலும், பாரிசிலும் அவர் 'மண் காப்போம்' பயணத்தில் இருந்தபோது பார்த்தேன். அவரின் செயல்களை பார்த்து மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். அரசியல் கட்சி தலைவர்கள் 'மண் காப்போம்' திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான சட்டங்கள் மற்றும் புத்துயிர் அளிக்கும் நடைமுறைகளை செயல்படுத்தவேண்டும்' என்றார்.

மேற்கண்ட தகவல் ஈஷா யோகா மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story