பெண் குழந்தைகள் கல்விக்கான விழிப்புணர்வு கார் பயணம்


பெண் குழந்தைகள் கல்விக்கான விழிப்புணர்வு கார் பயணம்
x

பெண் குழந்தைகள் கல்விக்கான விழிப்புணர்வு கார் பயணத்தை கூடுதல் டி.ஜி.பி. சங்கர் தொடங்கிவைத்தார்.

சென்னை

கோவையை சேர்ந்தவர் ஜி.டி. விஷ்ணு ராம். தொழிலதிபர், அல்ட்ரா சைக்கிள் வீரர், மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் என பன்முகத்திறமை கொண்டவர். இவர் பெண் குழந்தைகளின் கல்வியின் அவசியம், முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி- தேசு -லே- கோடேஷ்வர் ஆகிய இந்தியாவின் 4 மூலைகளுக்கும் கார் மூலம் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைக்க திட்டமிட்டார்.

அதன்படி அவர் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் வழியாக 12 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவிலான இந்த கார் பயணத்தை சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா அருகே நேற்று தொடங்கினார். அவருடைய கார் பயணத்தை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வடசென்னை இணை கமிஷனர் ரம்யா பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஜி.டி.விஷ்ணு ராம் முதல் கட்டமாக சென்னையில் இருந்து தேசு வரை 3 ஆயிரத்து 231 கி.மீ. தொலைவுக்கும், 2-வது கட்டமாக தேசுவில் இருந்து லே வரை 3 ஆயிரத்து 458 கி.மீ. தொலைவுக்கும், 3-வது கட்டமாக லேவில் இருந்து கோடேஷ்வர் வரை 2 ஆயிரத்து 212 கி.மீ. தொலைவுக்கும், 4-வது கட்டமாக கோட்டேஷ்வரில் இருந்து கன்னியாகுமரி வரை 2 ஆயிரத்து 643 கி.மீ. தொலைவுக்கும் கார் மூலம் பயணிக்க உள்ளார். பின்னர் கன்னியாகுமரியில் இருந்து சென்னை திரும்புகிறார். இவர் தனது சாகச பயணங்கள் மூலம் 6 தேசிய சாதனைகளை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story