நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி


நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி
x

ராமநாதபுரத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்


மத்திய அரசின் உயிர் தொழில் நுட்பவியல் துறையின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமிய உயிர்வள மையம் அமைக்கும் திட்டத்தின்கீழ் கிராம நாட்டுக்கோழி வள மையம் அமைக்கப்பட்டு ராமநாதபுரம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் பயிற்சி பட்டறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அறிவியல் பூர்வமான முறையில் புறக்கடை கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் செயல்விளக்க பயிற்சி பட்டறை ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து வந்திருந்த விஞ்ஞானிகள் செயல்விளக்க பயிற்சி அளித்தனர். கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் அப்பாராவ், நாட்டுக்கோழி வளர்ப்பின் முக்கித்துவத்தையும் ஏழை எளியோரின் மேம்பாட்டில் அவற்றின் பங்கினையும் எடுத்து கூறினார். பயனாளிகளுக்கு கோழிக்கூண்டு, தண்ணீர், தீவனம் வைப்பதற்கான கலன்கள், ஒரு மாத வயது நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் அவற்றிற்கு தேவையான தீவனம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி விரிவாக்கத்துறை தலைவர் சுதீப்குமார், ராமநாதபுரம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக தலைவர் விஜயலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story