உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்


உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
x

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மருத்துவ துறையினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.

செங்கல்பட்டு

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரம்ம குமாரிகள் இயக்கத்தினர், கல்லூரி, பள்ளி மாணவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மருத்துவ துறையினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகில், பிரம்மகுமாரிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பி.கே.புவனேஸ்வரி முன்னிலையில் பேரணியை மாமல்லபுரம் சுரதீப் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் ஜி.ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் சிலர் அரக்கன் வேடமிட்டு புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இதுகுறித்து நூதன முறையில் வழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்கள் கையில் புகையிலை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாமல்லபுரம் நகரின் முக்கிய சாலைகளான கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை வழியாக பேரணியாக சென்றனர். அப்போது சுற்றுலா பயணிகளிடம் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டுபிரசுரகளை வழங்கினர். புகையிலையின் தீமைகள் குறித்து ஓவிய, கட்டுரை போட்டியில் பங்கேற்ற கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் டாக்டர் இந்திராகாந்தி, சமூக ஆர்வலர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story