ஆயுத பூஜை விடுமுறை: சென்னையில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்


ஆயுத பூஜை விடுமுறை: சென்னையில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
x

ஆயுதப் பூஜையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 3,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை:

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையின் மூன்று பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 30 மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், இதர பஸ்களும் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பஸ்கள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் ஆகியவை தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள் பூவிருந்தவல்லி பைபாஸ் (மா.போ.க. பூவிருந்தவல்லி பணிமனை அருகில்) பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ஈ.சி.ஆர்), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர்) கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

மேலும், வரும் 30 மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பஸ்களுடன் 2,050 சிறப்புப் பஸ்களையும், பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பஸ்களையும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மேற்கூறிய பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story