பி.ஏ.பி. கால்வாயில் சீரமைப்பு பணி மும்முரம்


பி.ஏ.பி. கால்வாயில் சீரமைப்பு பணி மும்முரம்
x
தினத்தந்தி 22 Sep 2023 8:15 PM GMT (Updated: 22 Sep 2023 8:15 PM GMT)

தண்ணீர் கசிவை தடுக்க பி.ஏ.பி. கால்வாயில் சீரமைப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தண்ணீர் கசிவை தடுக்க பி.ஏ.பி. கால்வாயில் சீரமைப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பி.ஏ.பி. கால்வாய்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதற்கு 4 மண்டலங்களாக பிரித்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதற்கிடையில் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்காக பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

அணையின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில், 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 20-ந்தேதி முதல் பி.ஏ.பி. பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

சீரமைப்பு பணி

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே சீலக்காம்பட்டி பகுதியில் பிரதான கால்வாயில் கசிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நீர் இழப்பை தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைப்பு பணியை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது அணையில் இருந்து பி.ஏ.பி. பிரதான கால்வாயில் வினாடிக்கு 900 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

நடவடிக்கை

ரோந்து பணியின்போது சீலக்காம்பட்டி பகுதியில் 26-வது கிலோ மீட்டர் தூரத்தில் கால்வாயில் கசிவு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து நீர்கசிந்து உடைப்பு ஏற்பட்டால் நீர்இழப்பு ஏற்படும் என்பதால் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. ஆனாலும் கால்வாயில் தண்ணீர் திறப்பை நிறுத்தவில்லை. மேலும் கால்வாயின் தொடக்கம் முதல் கடைசி வரை தொடர்ந்து ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும். இதுபோன்ற கசிவுகளை சரிசெய்து முன்கூட்டியே சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story