அம்மா உணவகத்திற்கு குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட அரிசி மூட்டைகள்


அம்மா உணவகத்திற்கு குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட அரிசி மூட்டைகள்
x

அம்மா உணவகத்திற்கு குப்பை அள்ளும் வாகனத்தில் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.

திருச்சி

துறையூர்:

துறையூர் பஸ் நிலையத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மாலை என இரு வேளைகளில் பணியாளர்கள் சுமார் 12 பேர் சமையல் உள்ளிட்ட இதர பணிகளை செய்து வருகின்றனர். இந்த உணவகத்தில் காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் என பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அம்மா உணவகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், வெளியில் இருந்து அரிசி வாங்கி வந்து சமைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நேற்று மதியம் துறையூர் நகராட்சியில் குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்படும் சரக்கு வாகனத்தில் அம்மா உணவகத்திற்கு அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர் மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய மக்கள் பசியாறும் உணவுக்குண்டான அரிசியை சுத்தம் செய்யப்படாத குப்பை லாரியில் கொண்டு வரப்பட்டதும், சுகாதார அதிகாரியின் மேற்பார்வையில் இந்த நிகழ்வு நடைபெற்றதும் பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் மற்றும் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது. மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது பற்றி துறையூர் நகர்மன்ற தலைவரான செல்வராணியிடம் கேட்டபோது, 'அம்மா உணவகத்தில் அரிசி தட்டுப்பாடு கடந்த ஒரு வாரமாக இருந்து வந்துள்ளது பற்றி, பணியாளர்கள் நேற்று முன்தினம் தான் எனக்கு தெரியப்படுத்தினர். உடனடியாக தேவைப்படும் அரிசி மூட்டைகளை ஏற்பாடு செய்து, அவற்றை தனியாக வாடகை வண்டி மூலம் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினேன். ஆனால் இடையில் ஏதோ தவறு நடந்துள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். துறையூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளரின் நேரடி பார்வையில் உள்ள அம்மா உணவகத்தில் தரம், சுகாதாரம் உள்ளிட்டவற்றை தினமும் ஆய்வு செய்து, சுத்தமான உணவை வழங்கிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story