பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்


பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை

173 இடங்கள்

முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றானது பக்ரீத் பண்டிகையாகும். இதனை தியாகத் திருநாள் எனவும் அழைக்கின்றனர். பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பானி என அழைக்கப்படும் இறைச்சியை 3 ஆக பிரித்து அதனை நண்பர்கள், உறவினர்கள், ஏழைகளுக்கு என வழங்கி கொண்டாடுவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டையில் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி பள்ளிவாசல்கள் திறந்த வெளி இடங்கள் உள்பட மொத்தம் 173 இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சிறப்பு தொழுகை

புதுக்கோட்டையில் ஈத்கா பள்ளிவாசலில் காலை 6.30- மணிக்கு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் புத்தாடை அணிவித்து திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர். இதில் புதுக்கோட்டை தலைமை காஜி மவுலானா அமானுல்லா தலைமையில் தொழுகை நடைபெற்றது. அதே போல் தெற்கு 2-ம் வீதி, திருவப்பூர், கலிப் நகர் உள்பட நகரில் உள்ள 27 பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

இதே போல குர்பானி கொடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் சிலர் வீடுகளில் பிரியாணி சமைத்து நண்பர்களுக்கு வழங்கினர்.

மணமேல்குடி, கீரனூர்

மணமேல்குடி, வடக்கம்மாபட்டினம், அம்மாபட்டினம், கிருஷ்ணாஜிபட்டினம் உள்பட பல்வேறு பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகை தொழுகை நடத்தப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

கீரனூர்-திருச்சி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவரை ஒருவர்கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி வழியாக ஜும்மா பள்ளிவாசலை வந்தடைந்தனர். அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு ஏழை எளியோருக்கு புத்தாடைகள் மற்றும் குர்பானி வழங்கினர்.

கோட்டைப்பட்டினம், ஆலங்குடி

கோட்டைப்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் குர்பானிக்காக வாங்கப்பட்ட ஆடுகளை வெட்டி ஏழை மக்களுக்கு வழங்கினர்.

ஆலங்குடி ஈத்கா மைதானம், கலிபுல்லா நகர், பள்ளிவாசல் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

அன்னவாசல், திருவரங்குளம்

அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி மதினா பள்ளிவாசலில் இருந்து முஸ்லிம்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பெரிய பள்ளிவாசலில் உள்ள திடலுக்கு வந்து பள்ளிவாசல் இமாம் தலைமையில் தொழுகை நடத்தினர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் தொழுகை முடிந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு, அவரவர் வீடுகளில் ஆடுகளை குர்பானி கொடுத்தனர். இதேபோல் இலுப்பூர், அன்னவாசல், பரம்பூர், குடுமியான்மலை, வயலோகம், பெருமநாடு, புல்வயல், மாங்குடி, காலாடிப்பட்டி, பள்ளிவாசல்களில் பக்ரீத் தொழுகை நடத்தப்பட்டது. திருவரங்குளம், மேட்டுப்பட்டி, கைக்குறிச்சி, பூவரசகுடி, வல்லத்திராக்கோட்டை, முத்துப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.


Next Story