பக்ரீத் பண்டிகை: பொள்ளாச்சி, வால்பாறையில் சிறப்பு தொழுகை


தினத்தந்தி 29 Jun 2023 11:30 PM GMT (Updated: 29 Jun 2023 11:31 PM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி, வால்பாறையில் சிறப்பு தொழுகை நடந்தது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பக்ரீத் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி, வால்பாறையில் சிறப்பு தொழுகை நடந்தது.

சிறப்பு தொழுகை

பொள்ளாச்சி பகுதிகளில் நேற்று பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி தேர்நிலை திடல் பகுதியில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அங்கு காலை 7 மணிக்கு இமாம் முகமது மன்சூர் ரஹ்மானி ஹஜ்ரத் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

இதேபோன்று சூளேஸ்வரன்பட்டி, கோட்டூர் ரோடு குமரன் நகர், மார்க்கெட் ரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலும் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

வால்பாறை

வால்பாறை பெரிய பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினார்கள். தொழுகைக்குப் பின்னர் வாழைத் தோட்டம் ஈத்கா மைதானத்தில் குர்பான் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பொது மக்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவருக்கும் இறைச்சி வழங்கப்பட்டது.இந்த தொழுகை மற்றும் குர்பான் நிகழ்ச்சியில் வால்பாறை சுற்று வட்டார பகுதி எஸ்டேட்டில் பணிபுரிந்து வரக்கூடிய வடமாநில முஸ்லிம்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

இதே போல சோலையாறு நகர், உருளிக்கல், சிங்கோனா மற்றும் சோலையாறு எஸ்டேட் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிவாசல்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story