பால்குடம், வெள்ளி தேர் ஊர்வலம்


பால்குடம், வெள்ளி தேர் ஊர்வலம்
x
தினத்தந்தி 20 April 2023 6:45 PM GMT (Updated: 20 April 2023 6:46 PM GMT)

பிரான்மலையில் உள்ள வடுகபைரவர் ஜெயந்தன் பூஜையையொட்டி பால்குடம், வெள்ளி தேர் ஊர்வலம் நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி

பிரான்மலையில் உள்ள வடுகபைரவர் ஜெயந்தன் பூஜையையொட்டி பால்குடம், வெள்ளி தேர் ஊர்வலம் நடைபெற்றது.

ஜெயந்தன் விழா

சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினத்திற்குட்பட்ட திருக்கொடுங்குன்ற நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தெற்கு திசையில் காட்சியளிக்கும் வடுகபைரவர் சுவாமிக்கு ஆண்டுக்கு இருமுறையாக கார்த்திகை மாதத்தில் சஷ்டி விழாவும், சித்திரை மாத அமாவாசை தினத்தில் ஜெயந்தன் பூஜை விழாவும் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆரூர் வட்டகை ஏழூர் பத்து உறவின் முறையை சேர்ந்த பிரான்மலை மதகுபட்டி கிராமத்தார்கள் சார்பில் நடத்தப்படும் ஜெயந்தன் பூஜை இந்த ஆண்டு நடைபெற்றது. விழாவிற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கினார்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், பிரான்மலை ஊராட்சி தலைவர் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல அடிகளாருக்கு கோவில் முதல் ஸ்தானிகர் உமாபதி சிவாச்சாரியார் மற்றும் மதகுபட்டி கிராமத்தார்கள் சார்பிலும் கும்ப மரியாதை செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் இருந்து மதகுபட்டி கோவில் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

பிரான்மலையில் உள்ள வடுகபைரவர் ஜெயந்தன் பூஜையையொட்டி பால்குடம், வெள்ளி தேர் ஊர்வலம் நடைபெற்றது.

அங்கு பால் குடங்களுக்கு சிறப்பு பூஜை செய்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பக்தர்களுக்கு பால் குடங்களை எடுத்து கொடுத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரான்மலை மதகுபட்டி கிராமத்திலிருந்து பொன்னம்பல அடிகளார் தலைமையில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவிலில் வடுக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலையில் மதகுபட்டி கிராமத்தார்கள் சார்பில் பல லட்ச ரூபாய் செலவில் கடந்த ஆண்டு தயார் செய்யப்பட்ட வெள்ளித்தேரில் வடுக பைரவர் சுவாமி எழுந்தருளினார். பின்னர் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை குன்றக்குடி திருவண்ணாமலை தேவஸ்தானம் மற்றும் பிரான்மலை மதகுபட்டி கிராமத்தார்கள் செய்திருந்தனர்.


Next Story