வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பர்களில் வழங்க தடை: தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு


வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பர்களில் வழங்க தடை: தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு
x

தூத்துக்குயில் கலெக்டர் செந்தில் ராஜ் தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், உணவு, வணிக நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில் ராஜ் தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், உணவு, வணிக நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் வடை கடைகள், தேநீர் கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் உள்ளிட்ட கடைகளில் வடை, பஜ்ஜி, போன்டா, பப்ஸ், ஸ்வீட்ஸ் மற்றும் இதர கார வகைகளை பொதுமக்களுக்கு அச்சிட்ட பேப்பர் மற்றும் காகிதங்களில் பரிமாறுவதும், பார்சல் கட்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. வணிகர்களின் இதுபோன்ற பாதுகாப்பற்ற பழக்க வழக்கங்களால் பொது சுகாதார நலனிற்கு கேடு ஏற்படுகிறது.

எனவே பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், வணிகர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம் ஆகும். அதன் அடிப்படையில் அச்சிட்ட பேப்பர் மற்றும் காகிதங்களில் உணவை பரிமாறுவதாலும், பார்சல் கட்டுவதாலும் ஏற்படும் அபாயங்கள் மற்றும் சமூக பொறுப்புகள் குறித்து அருந்ததி அரசு என்பவர் இயக்கி உள்ள 'கருப்பு மை' என்ற விழிப்புணர்வு குறும்படத்தை கலெக்டர் செந்தில் ராஜ் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் செந்தில் ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பர்களில் வழங்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி வினியோகம் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story