போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள்


போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள்
x

போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள்

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம் பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பர பேனர்கள்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பஸ் நிலையத்தில் விபத்தை உருவாக்கும் வகையில் விதிகளை மீறி விளம்பர பேனர்கள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.

பேனர்கள் வைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவற்றை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதிராம்பட்டினம் பஸ் நிலையத்தை மறைத்தபடி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

அகற்ற நடவடிக்கை

பல்வேறு நிகழ்ச்சிகளையொட்டி பேனர்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரும் அந்த பேனர்கள் பல நாட்களாக அகற்றப்படாமல் அப்படியே உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். பேனர்களை பஸ் நிறுத்துமிடங்களில் வரிசையாக வைப்பதால் பஸ் வருவது தெரியவில்லை என்பது பயணிகளின் வேதனையாக உள்ளது.

பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story