இலங்கை கடற்படை விடுவித்த விசைப்படகை மீனவர்கள் ராமேசுவரம் கொண்டு வந்தனர்


இலங்கை கடற்படை விடுவித்த விசைப்படகை மீனவர்கள் ராமேசுவரம் கொண்டு வந்தனர்
x
தினத்தந்தி 23 March 2023 6:45 PM GMT (Updated: 23 March 2023 6:47 PM GMT)

இலங்கை கடற்படை விடுவித்த விசைப்படகை மீனவர்கள் ராமேசுவரம் கொண்டு வந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

இலங்கை கடற்படை விடுவித்த விசைப்படகை மீனவர்கள் ராமேசுவரம் கொண்டு வந்தனர்.

விசைப்படகு விடுவிப்பு

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு கிறிஸ்டோபர் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் 7 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவ்வாறு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மற்றும் படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட 7 மீனவர்களும் ஓரிரு வாரங்களில் விடுதலை செய்யப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்தனர். மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் படகு விடுதலை செய்யப்படாமல் மன்னார் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டது. இந்த விசைப்படகை மீட்டு கொண்டு வருவதற்காக ராமேசுவரத்தில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு மூன்று விசைப்படகில் 21 பேர் கொண்ட மீனவர்கள் குழுவினர் மத்திய, மாநில அரசுகள் அனுமதியுடன் ராமேசுவரத்தில் இருந்து இலங்கை மன்னார் கடற்கரை பகுதிக்கு சென்றனர். ஆனால் அந்த விசைப்படகானது மன்னார் கடற்கரை பகுதியில் மணலில் புதைந்து கிடந்ததால் அந்த படகை மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து இலங்கை மீனவர்கள் கடற்படையினர் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த அந்த விசைப்படகை மீட்டு ராமேசுவரம் நோக்கி புறப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட படகுடன் நேற்று மாலை ராமேசுவரம் துறைமுகப் பகுதிக்கு மீனவர்கள் குழுவினர் வந்து சேர்ந்தனர்.

இலங்கை கடற்படை விடுவித்த விசைப்படகை மீனவர்கள் ராமேசுவரம் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சேசு ராஜா கூறும்போது,

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் கடைசியாக 2017-18-ம் ஆண்டு இடைப்பட்ட பகுதியில் 35 படகுகள் மட்டுமே மீட்டு கொண்டுவரப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக எந்த ஒரு படகும் இலங்கையில் இருந்து விடுதலை செய்து கொண்டு வரப்படாத நிலையே இருந்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு ஒன்று விடுதலை செய்து மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த படகும் கடற்கரை மணலில் புதைந்து கிடந்து சேதமடைந்துள்ளது. இன்னும் இலங்கை கடற்படை வசம் தமிழகத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்த 106 படகுகள் உள்ளன. அதனால் மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளையும் மீட்டு கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story