அடிப்படையில் மதம் மாறுபவர்களுக்கு இடஒதுக்கீடு ஏன்? வானதி சீனிவாசன் பேட்டி


அடிப்படையில் மதம் மாறுபவர்களுக்கு இடஒதுக்கீடு ஏன்? வானதி சீனிவாசன் பேட்டி
x

அடிப்படையில் மதம் மாறுபவர்கள் ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்? வானதி சீனிவாசன் கூறினார்.

சென்னை,

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு சட்டசபை வளாகத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபையில் பட்டியலின ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்கனவே பட்டியலினத்து மக்கள் அனுபவித்து கொண்டிருக்கிற பலனை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து நாங்கள் சில கருத்துக்களை முன்வைத்தோம். மதம் மாறிய பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள் அரசின் இட ஒதுக்கீடு சலுகையை ஆராய்வதற்கு மத்தியிலே மோடி தலைமையிலான அரசு 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்த குழு இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது.

இது தொடர்பான வழக்கு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, இது தொடர்பான விவகாரங்களை மத்திய அரசு மேற்கொண்டு வரும்போது, கோர்ட்டு வரம்பிற்கு உள்ள ஒரு விவகாரத்தில், மாநில அரசு ஏன் இந்த தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். கிறிஸ்துவத்திற்கும், இஸ்லாமியத்திற்கும் மதம் மாறினால் கூட தொடர்ச்சியாக தீண்டாமை கொடுமை பட்டியல் இன மக்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை இந்த தீர்மானம் மறைமுகமாக சொல்ல வருகிறதா என்று நாங்கள் முதல்-அமைச்சரிடம் கேள்வி எழுப்பினோம்.

ஏன் இடஒதுக்கீடு

பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்கான சமூக நீதி அரசு, திராவிட மாடல் அரசு எனக் கூறும் தி.மு.க. அரசு, வேங்கை வயல் பிரச்சினை, பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான சிறப்பு சட்டம், ஒவ்வொரு வாரமும் நடந்து வரும் கவுரவ கொலைகளை தடுப்பதற்கான சட்டம் இவற்றைப்பற்றி எல்லாம் எதையும் கவலைப்படாத தி.மு.க. முழுக்க, முழுக்க அரசியல் நோக்கத்திற்காக இந்த தீர்மானத்தை கொண்டுள்ளது என பா.ஜ.க. கருதுகிறது.

எனவே இந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள், வெளிநடப்பு செய்துள்ளோம்.

இன்னும் கூட தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு பொதுவான மயானம் கிடையாது, இவை அனைத்தும் மாநில அரசின் விவகாரத்தில் வரம்பில் வரும் நிலையில் அந்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு அரசியல் காரணங்களுக்காக ஏமாற்றக்கூடிய வகையில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறார்கள்.

அடிப்படையில் மதம் மாறுபவர்கள் ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்?, மதம் மாறினாலும் மக்களுக்கு தீண்டாமை நிலவுகிறது. பட்டியல் என மக்களுக்கு பொது மயானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில், இதையெல்லாம் சரி செய்யாமல், கண்துடிப்பிற்காக இதையெல்லாம் இந்த அரசு செய்கிறது என்பதுதான் எங்களுடைய வாதம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story