மெரினா கடலில் குளித்தவர் நீரில் மூழ்கி சாவு


மெரினா கடலில் குளித்தவர் நீரில் மூழ்கி சாவு
x
சென்னை

சென்னை,

சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு நேற்று, சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர் குடும்பமாக வந்திருந்தனர். பலரும் கடலில் குளித்தவாறு இருந்தனர். அப்போது, கடலோர காவல் படையினர் கடலில் குளிப்போரை எச்சரித்த வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில், மதியம் 2.30 மணியளவில் கடலில் குளித்து கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். இதைபார்த்த அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர்.

இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படையினர் கடலில் சிக்கியவரை மீட்டு மயங்கிய நிலையில் வெளியே கொண்டு வந்தனர். பின்னா், அவருக்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடலில் மூழ்கி இறந்தவர் யார்? கடல் அலையில் சிக்கி இறந்தாரா? இல்லை தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


Next Story