குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 3 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 11:21 AM GMT)

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

கனமழை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்த ஆண்டு குற்றாலத்தில் சீசன் தாமதமாக தொடங்கிய நிலையில், அருவிகளிலும் தண்ணீர் குறைவாகவே விழுந்தது. நேற்று முன்தினம் இரவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. நேற்று காலையிலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்றும் வேகமாக வீசியது.

களைகட்டிய சீசன்

தொடர்ந்து பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால், குற்றாலத்தில் சீசன் களைகட்டியது.

ஆனால், மதியம் 1 மணியளவில் அருவிகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

குளிக்க தடை

மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டியும், ஐந்தருவியில் அனைத்து கிளைகளையும் மூழ்கடித்தவாறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் அருவிகளில் குளிக்க காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.


Next Story