கரடி, யானை நடமாட்டம்; பொதுமக்கள் பீதி


கரடி, யானை நடமாட்டம்; பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 29 Aug 2023 8:15 PM GMT (Updated: 29 Aug 2023 8:15 PM GMT)

கூடலூர் எம்.ஜி.ஆர். நகரில் கரடி, யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் தாலுகா அலுவலகம் மற்றும் போலீஸ் நிலைய வளாகத்துக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு கரடி நடமாடியது. பின்னர் வந்த வழியாக கரடி திரும்பி சென்றது. இந்தநிலையில் கூடலூர் முத்தமிழ் நகரில் இருந்து எம்.ஜி.ஆர். நகர் வழியாக நர்த்தகி பகுதிக்குள் கரடி நள்ளிரவில் நடந்து செல்வது கண்காணிப்பு கேமராக்களில் கடந்த 26-ந் தேதி பதிவானது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் முத்தமிழ் நகரில் இருந்து எம்.ஜி.ஆர். நகர் வழியாக கரடி சாலையில் உலா வந்தது. தொடர்ந்து காட்டு யானை அதே சாலையில் நடமாடியது. இதை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து வன ஊழியர்கள் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கரடி மற்றும் காட்டு யானை ஊருக்குள் தினமும் வருவதால் அவசர காலங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. இதேபோல் வெளியூர் சென்று விட்டு இரவு தாமதமாக வரும் பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை காணப்படுகிறது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story