காரைக்குடி அருகே ரியல் எஸ்டேட் புரோக்கர் அடித்துக் கொலை 4 பேர் கைது


காரைக்குடி அருகே  ரியல் எஸ்டேட் புரோக்கர் அடித்துக் கொலை 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:46 PM GMT)

காரைக்குடி அருகே இடத்தகராறில் ரியல் எஸ்டேட் புரோக்கர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே இடத்தகராறில் ரியல் எஸ்டேட் புரோக்கர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இடத்தகராறு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் கோத்தர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 52). ரியல் எஸ்டேட் புரோக்கர்.

கோட்டையூர் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் தாமஸ் குழந்தை (55) இவர் சமீபத்தில் அப்பகுதியில் ஒரு இடத்தை சிவகுமார் மூலமாக வாங்கியிருந்தார். தற்போது தாமஸ் குழந்தை, அந்த இடத்தை விற்க முயன்றார். அப்போது அந்த இடத்தில் பிரச்சினை இருப்பதாக தெரியவந்தது. இதனால் சிவகுமாரிடம் இடத்தை எடுத்து கொண்டு பணத்தை கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் தாமஸ் குழந்தை, தன்னுடன் சிலரை அழைத்துக்கொண்டு சிவகுமார் வீட்டுக்கு சென்று அவரை அழைத்து சென்றார். பின்னர் இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் சிவகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சிவகுமார் மயங்கினார்.

4 பேர் கைது

இந்நிலையில் சிவகுமாரை அப்படியே விட்டுவிட்டு தாமஸ் குழந்தையும் அவருடன் வந்தவர்களும் சென்று விட்டனர். அதன்பின் அக்கம் பக்கத்தினர் சிவகுமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமஸ் குழந்தை, செல்லையா (26), பாலாஜி (25), சீனிவாசன் (27) ஆகியோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story