பு.சங்கேந்தி கிராமத்தில் அழகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா


பு.சங்கேந்தி கிராமத்தில் அழகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
x

பு.சங்கேந்தி கிராமத்தில் அழகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

திருச்சி

புள்ளம்பாடி ஒன்றியம் பு.சங்கேந்தி, அய்யனார்புரத்தில் அழகு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நேற்று காலை 9 மணிக்கு முத்து மாரியம்மனுக்கு பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. மதியம் 11 மணிக்கு விநாயகர், அழகு முத்துமாரியம்மன் கோவிலில் தீபாரதனையுடன் காப்பு கட்டிய பக்தர்கள் அழகு குத்தியும், பறவைகாவடி, பால்குடம், அக்னி சட்டி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கிராம பொதுமக்கள் அவரவர் வீடுகளிலிருந்து மாவிளக்கு போட்டு எடுத்துவந்து அம்மன் கோவில் முன்பு வைத்து வழிபட்டு சென்றனர்.இரவு 8 மணிக்கு அழகு முத்துமாரியம்மன் மின்விளக்கு ரதத்தில் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தார். விழாவில் பு.சங்கேந்தி, அய்யனார்புரம், சந்திவீரப்பபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. நடைபெறும். விழாவையொட்டி ஊராட்சி மன்றம் சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.


Next Story