பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்


மீண்டும் புத்துயிர் பெறுமா பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் என எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர்

1972-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக மறுவாழ்வு திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார்.

இதன் மூலம் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு அவர்கள் தகுதிக்கு ஏற்ப சுயதொழில் வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கிக் கொடுத்தது.

ஓடி ஒளிந்தார்கள்

* ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் என்று மக்கள் கூடுகிற இடங்களில் பிச்சை எடுப்பவர்களை, வாகனங்களில் வந்து பிடித்துப் போவார்கள்.

அரசு வாகனங்கள் வருவதைக் கண்டாலே போதும் தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்று பிச்சைக்காரர்கள் ஓடி ஒளிந்தார்கள்.

* அவ்வாறு பிடித்துப் போனவர்களில் நோயாளிகளாக இருந்தால் அரசு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும்.

* மன நோயாளிகளாக இருந்தால் மனநல காப்பகத்தில் சேர்க்கப்படுவர்.

* மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்களின் தகுதிக்கு ஏற்ப சுயதொழில்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.

* நிர்பந்தங்களால் பிச்சை எடுக்க வந்தவர்களாய் இருந்தால் உறவினர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

* இதற்காக தமிழ்நாட்டில் 6 இடங்களில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையங்கள் கட்டித் தரப்பட்டன.

இது ஒரு உன்னதமான சமூகநலத் திட்டம். இதை ஒழுங்காக நடைமுறைப்படுத்தி இருந்தால் பிச்சைக்காரர்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

காசு பார்க்கும் கயவர்கள்

'பிச்சை எடுத்து உண்ணுவது அவமானம். உழைத்து உண்பதே தன்மானம்' என்பது அந்த திட்டத்தின் நோக்கமாக அமைந்தது.

நாளடைவில் அது முடங்கிப்போனதால் பஸ், ரெயில் நிலையங்கள், போக்குவரத்து சிக்னல்கள், வழிப்பாட்டு தலங்கள் போன்ற இடங்கள் மீண்டும் பிச்சைக்காரர்களின் புகலிடமாக மாறிப்போயின.

குழந்தைகளின் வயிற்று பசியைப் போக்குவதற்காக ஆதரவற்ற முதியோர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகுகின்றனர். அதே நேரம், உழைக்காமல் கையை நீட்டினாலே பணம் கிடைப்பதால் பிச்சை எடுப்பதை தொழிலாக பலர் செய்யவும் துணிகிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால்? குழந்தைகள், பெண்களை கட்டாயப்படுத்தி இந்த தொழிலில் தள்ளி காசு பார்க்கும் கயவர் கூட்டமும் நிழல் மறைவாய் இருக்கத்தான் செய்கிறது. இயக்குனர் பாலாவின் 'நான் கடவுள்' திைரப்படம், இந்த அக்கிரமத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது.

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், இந்தூர், லக்னோ, நாக்பூர், பாட்னா, அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

போலீஸ் நடவடிக்கை

தற்போது தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களை சேர்ந்த சிலரும் தமிழ்நாட்டில் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்து வருகிறார்கள். போக்குவரத்து அதிகமாக இருக்கும் 'சிக்னல்' பகுதிகளில் அவர்களை குழந்தை குட்டிகளுடன் காணமுடிகிறது.

இந்த நிலையில் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கையை தமிழக போலீஸ்துறை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த 3-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மீட்கப்படும் பிச்சைக்காரர்கள் அரசு காப்பகங்கள், மறுவாழ்வு மையங்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

பெண்கள், குழந்தைகளை பிச்சை தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

இதில் கண்துடைப்பு இல்லாமல் உணர்வுப்பூர்வமான நடவடிக்கைகள் இருக்கும் என்றால் பிச்சை எடுப்பவர்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன் மறுவாழ்வும் பெறுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பிச்சை எடுக்கும் தொழிலை ஒழிப்பதற்காக எடுத்துவரும் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் ஏற்படுத்திவரும் தாக்கம் குறித்து கீழே காண்போம்.

பாதுகாப்பது தான் கடமை

விருதுநகரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவகுருநாதன்:-

வறுமை காரணமாக ஒரு தனி மனிதன் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். சேமநலஅரசு என சொல்லப்படும் நிலையில் பிச்சை எடுக்கும் சூழலை தவிர்க்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட வேண்டியது அரசின் கடமையாகும். பிச்சை எடுப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பது ஏற்புடையது அல்ல.

அவர்களை குடும்பத்தாரிடம் அல்லது காப்பகத்தில் ஒப்படைப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் போலீசார் மூலம் குற்றவியல் வழக்குப்பதிவு செய்வது என்பது தர்மத்திற்கும், நியாயத்திற்கும் புறம்பானதாகும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும். அரசு காப்பகங்கள் மூலம் அவர்களை பாதுகாக்க வேண்டியது கடமையாகும்.

மறுவாழ்வு மையம்

வலையங்குளம் பிரின்ஸ்:-

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் தற்போது முடக்கம் அடைந்து காணப்படுகிறது. இதனால் ரெயில் நிலையம், பஸ் நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிச்சைக்காரர்கள் அதிகம் காணப்படுகின்றனர். இதே போன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர் சாலையோரம் சுற்றி திரிகின்றனர்.

ஆதலால் நாம் இருக்கும் பகுதியில் இதுபோன்று யாேரனும் சுற்றி திரிந்தால் இதுகுறித்து போலீசாருக்கு நாம் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அவர்களை மீட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்க்க முடியும்.

மறுவாழ்வு ஏற்பட முயற்சி

சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி:-

சாத்தூர் பகுதியில் சுற்றி வந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் கண்டறியப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் பிச்சை எடுப்பவர்களை கண்டறிந்து ஆதரவற்றோர் மையத்திற்கு அனுப்பி வைத்து அவர்களது வாழ்வில் மறுவாழ்வு ஏற்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அப்படி ஆதரவற்ற மையத்திற்கு செல்வோர் குறை ஏதும் இருந்தாலும் தகவல் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெருக்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றவர்களுக்கு அவர்களது மறுவாழ்விற்கு உதவ போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஆதரவற்றவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ளும் போது அச்சப்பட தேவையில்லை. ஆதரவற்றவர்கள் பற்றிய விவரங்களை போலீசாரிடம் பொதுமக்கள் அச்சமின்றி தெரிவிக்கலாம்.

மனநல ஆலோசனை

ராஜபாளையம் செல்வகுமார்:-

பிச்சை எடுப்பவர்களில் 70 சதவீதத்தினர் குறைந்த பட்ச ஊதியம் பெற்று குடும்பத்தை கவனிக்க முடியாதவர்கள் ஆவர். வேறு வழியின்றி இவர்கள் பிச்சை எடுக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். பிச்சை எடுப்பவர்கள் அனைவரையும் அழைத்து மருத்துவ சிகிச்சை அளித்து மனநல ஆலோசனைகள் வழங்கி, சுயதொழிலில் ஈடுபட வைத்து அவர்கள் நல்ல மனநிலைக்கு மாறும் வரை மறுவாழ்வு இல்லங்களிலே தங்கவைக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆபரேஷன் மறுவாழ்வு நடவடிக்கை மூலம் மீட்கப்படும் வயதான பிச்சைக்காரர்களுக்கு மட்டும்தான் அடைக்கலம். உடல்நிலை நன்றாக உள்ள பிச்சைக்காரர்கள் மனதில் உழைத்து உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது.

வழக்குப்பதிவு

விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு மனோகர்:-

தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தியதின் பேரில் மாவட்டத்தில் பிச்சை எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களை காப்பகத்தில் அல்லது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டோம். மொத்தம் 53 பேரை கண்டறிந்து அவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளோம். சிலர் குடும்பத்தாரிடம் செல்வதை ஏற்றுக் கொண்டதால் அவர்களை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தோம். அருப்புக்கோட்டை மற்றும் திருச்சியில் உள்ள காப்பகங்களில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டும் உடல்நலன் நல்ல நிலைமையில் இருந்தும் அவர் காப்பகத்திற்கு வர மறுத்ததுடன் பிச்சை எடுப்பதையே தொழிலாக செய்வேன் என்று அடம் பிடித்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல பெருநகரங்களில் ஒரு நபர் பலரை வேலைக்கு வைத்து பிச்சை எடுப்பதை தொழிலாக செய்து வரும் நடைமுறை விருதுநகர் மாவட்டத்தில் இல்லை. ஆனாலும் தொடர்ந்து பிச்சை எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களை குடும்பத்தாரிடமோ அல்லது காப்பகத்திலோ ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.




Next Story