நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

கரூரில் வெற்றிலை விலை வீழ்ச்சியால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நொய்யல்,
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, புங்கோடை, முனிநாதபுரம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்றவற்றை பயிர் செய்துள்ளனர்.
வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் , பாண்டமங்கலம், பொத்தனூர் , பரமத்திவேலூர் தனியார் வெற்றிலைமண்டிக்கும், பரமத்திவேலூர் பழையதேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் ,ஆந்திரா, கேரளா ,கர்நாடகா , மகாராஷ்டிரா,உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் 104 கவுளி கொண்ட இளம் பயிர் வெள்ளைக்கொடி ஒரு சுமை ரூ 8ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட இளம் பயிர் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ 3,500-க்கும் விற்பனையானது. 104 கவுளிகொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமைரூ 3,500-க்கும் ,104 கவுளி கொண்ட முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ1,300-க்கும்விற்பனையானது.
இன்று 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.4 ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ. 2 ஆயிரத்திற்கும் விற்பனையானது. 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை 1800-க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.800- க்கும் விற்பனையானது.
வெற்றிலை உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக வெற்றிலை விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. வெற்றிலை விலை வீழ்ச்சியால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.






