நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழை: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94 அடியை தாண்டியது- அணைக்கு வினாடிக்கு 22,116 கன அடி தண்ணீர் வருகிறது


பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 22,116 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடு, கிடு வென உயர்ந்து 94 அடியை தாண்டியது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 22,116 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடு, கிடு வென உயர்ந்து 94 அடியை தாண்டியது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. இந்த அணையின் மொத்த நீர் பிடிப்பு கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.

நீர் வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் குறிப்பாக அவலாஞ்சி, மேல்பவானி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும், கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியதால் அணையில் இருந்து உபரி தண்ணீர் திறப்பதாலும் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 672 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 91.30 அடியாக இருந்தது.

94 அடியை தாண்டியது

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 22 ஆயிரத்து 116 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 94.1 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும் பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் மாயாற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் பரிசல் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தெங்குமரஹடா பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியாமல் அந்த பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது.


Next Story