நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணை

தமிழ்நாட்டின் 2-வது பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி. அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றின் வழியாக தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நீர்வரத்து அதிகரிப்பு

நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 657 கன அடி தண்ணீர் வந்தது. இந்தநிலையில் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதனால் நேற்று மாலை 4 மணியளவில் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,492 கன அடியாக அதிகரித்தது.‌ அப்போது அணையின் நீர்மட்டம் 103.71 அடியாக இருந்தது.

பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 300 கன அடியாக குறைக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


Next Story