பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

ஈரோடு

பவானிசாகர்

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதிகளை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு நீர் வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது

நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,247 கன அடியாக இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 87.36 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 800 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 432 கன அடியாக குறைந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 87.02 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் 800 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,000 கன அடியும் திறக்கப்பட்டது.


Next Story