பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.65 அடியாக உயர்வு


பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.65 அடியாக உயர்வு
x

நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

ஈரோடு,

பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த 2 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவும், கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து அவ்வப்போது மின் உற்பத்திக்காக திறந்துவிடப்படும் தண்ணீராலும் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,519 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,005 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Next Story