மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி


மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:45 PM GMT)

சிவகங்கையில் நடைபெற்ற, பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகளை கலெக்டர் ஆஷா அஜீத் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை

அண்ணா பிறந்தநாள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டமாக சிவகங்கையில் சைக்கிள் போட்டி நடைபெற்றது. சிவகங்கை அரண்மனை வாசல் அருகில் இருந்து தொடங்கிய இந்த போட்டிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த முன்னிலை வகித்தார். இப்போட்டியில், 13 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் 68 மாணவர்களும், 9 மாணவிகளும், 15 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் 102 மாணவர்களும், 78 மாணவிகளும் மற்றும் 17 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் 126 மாணவர்களும், 97 மாணவிகளும் என மொத்தம் 480 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

போட்டி

13 வயதிற்குட்பட்ட மாணவ மற்றும் மாணவிகளுக்கு கற்பகம் விநாயகர் மெட்ரிக்குலேசன் பள்ளி வரையிலும், 15 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நாட்டரசன்கோட்டை மின்வாரிய அலுவலகம் வரையிலும், 17 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நாட்டரசன்கோட்டை ஆர்ச் வரையிலும் போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் அயூப்கான், சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story