உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி: சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல 21-ந்தேதி வரை தடை


உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி: சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல 21-ந்தேதி வரை தடை
x

உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி காரணமாக சொரிமுத்து அய்யனார் கோவிலுக்குபக்தர்கள் செல்ல விதித்த தடை வருகிற 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை

நெல்லை மாவட்டம் அம்பை அருகே பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். மேலும் இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான புலிகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி காரணமாக கடந்த 8-ந்தேதி முதல் வருகிற 16-ந்தேதி வரை காரையார், அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர்.

இந்த நிலையில் அம்பை கோட்டத்திற்கு உட்பட்ட முண்டந்துறை வனச்சரக பகுதியில் வருகிற 21-ந்தேதி வரையிலும் வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் நடைபெற இருப்பதால், முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட சொரிமுத்து அய்யனார் கோவில், காரையார், சேர்வலாறு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் செல்ல விதித்த தடை வருகிற 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவலை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை துணை இயக்குனர் செண்பகபிரியா தெரிவித்துள்ளார்.


Next Story