உயிரிழக்கும் பண்ணைக் கோழிகளைக் கொண்டு 'பறவைக் கரைசல்' - பட்டதாரி வாலிபர் அசத்தல்


பாப்பிரெட்டிப்பட்டி அருகே உயிரிழக்கும் பண்ணைக் கோழிகளைக் கொண்டு பறவைக் கரைசலை பட்டதாரி வாலிபர் தயாரித்துள்ளார்.

பாப்பிரெட்டிப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி இவரது மகன் ஹேமந்த் குமார்(வயது 24). எம்.பி.ஏ., பட்டதாரி. அதேபகுதியில், முட்டைக்காக கோழிகளை வளர்க்கும் கோழிப்பண்ணையும், விவசாயமும் செய்து வருகிறார்.

கோழிப்பண்ணையில் நாள்தோறும் உயிரிழக்கும் கோழிகளால் சுற்றுச்சூழல் பாதிப்படையாத வகையில், அவற்றை குழிதோண்டி புதைத்து அல்லது பிரத்தியேக எந்திரம் மூலம் எரித்துத்தான் அழிக்க வேண்டும் என்பது அரசின் விதி. ஹேமந்த் குமார் பண்ணையிலும் இந்த நடைமுறைகளைத் தான் பின்பற்றி வந்தனர்.

இந்நிலையில், பண்ணை தொடர்பான தேவைக்காக தர்மபுரி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர் சாமுவேல் ராஜ்குமாரை சந்தித்துள்ளார். அப்போது அவர் வழங்கிய ஆலோசனைகளின்படி புதிய தொழில்நுட்பம் ஒன்றை முயற்சி செய்ய முன்வந்துள்ளார். பண்ணையில் உயிரிழக்கும் கோழிகளைக் கொண்டு, 'பறவைக் கரைசல்' தயாரித்து பயிர்களுக்கு பயன்படுத்துவதே அந்த புதிய செயல்முறை ஆகும்.

இதுகுறித்து ஹேமந்த் குமார் கூறியது,

மாவட்ட சுற்றுச் சூழல் அலுவலர் தற்செயலாக அறிமுகம் செய்த இந்த தொழில்நுட்பம் மூலம், உயிரிழக்கும் கோழிகளை கரைசலாக மாற்றுகிறோம். பிரத்தியேக இயந்திரம் மூலம் கோழிகளை துண்டுகளாக்கி, நீரில் ஊற வைத்த மண் பானையில் இட்டு அதனுடன் சாணக் கரைசல், பனை வெல்லம் அல்லது வெல்லக் கரைசல் அல்லது கரும்புச் சாறு ஆகியவற்றை குறிப்பிட்ட அளவில் சேர்த்த பின்னர் முக்கால் பானை அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும்.

பின்னர் மண்பாண்ட தட்டால் பானையை மூடி சாக்குத் துண்டு மூலம் இறுகக் கட்ட வேண்டும். அதன்பின்னர், ஏற்கெனவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ள படுக்கை மீது பானைகளை வரிசையாக அடுக்க வேண்டும். மிதமான ஈரப்பதமுள்ள கோழி எருவைக் கொண்டு பானையை மூடும் அளவு மூடாக்கு உருவாக்க வேண்டும்.

இந்த மூடாக்கில் ஈரப்பதம் குறையாத வகையில் தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். இவ்வாறு வைக்கப்பட்ட பானையை 90 நாட்களுக்கு பின்னர் எடுத்தால் இறகு, எலும்பு உட்பட கோழிகளின் 90 சதவீத பாகங்கள் கரைசலாக மாறியிருக்கும்.

இந்த வடித்து எடுத்து 1 லிட்டர் கரைசலை 20 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த பறவைக் கரைசலை நெல்லி, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட பழவகை மரங்களின் வேர்ப்பகுதியைச் சுற்றி மரத்துக்கு 2 லிட்டர் வீதம் ஊற்றி விடலாம். ஒருமுறை ஊற்றிய மரத்துக்கு மீண்டும் 6 மாதத்துக்கு பின்னர் ஊற்றலாம். இவ்வாறு பரவைக் கரைசல் மூலம் ஊக்கமளிக்கப்பட்ட மரங்கள், வழக்கத்தை விட 20 சதவீத கூடுதல் விளைச்சல் தரத் தொடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story