குளித்தலையில் பா.ஜனதா-தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்; 24 பேர் கைது


குளித்தலையில் பா.ஜனதா-தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்; 24 பேர் கைது
x

குளித்தலையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது பா.ஜனதா-தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்

கடையடைப்பு

குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி பின்னர் தாலுகா மருத்துவமனையாக தரம் குறைத்த தமிழக அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் குளித்தலை பகுதியில் கடையடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் பா.ஜனதாவினர் குளித்தலை நகரத்தில் உள்ள கடைகளில் துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து வந்த தி.மு.க.வினர் வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைக்க வேண்டாம் என்று கூறிச்சென்றனர். இந்தநிலையில் நேற்று குளித்தலை பகுதிகளில் காலை நேரத்தில் ஆங்காங்கே ஒரு சில கடைகள் திறக்கப்பட்டும் பல கடைகள் மூடப்பட்டும் இருந்தன.

வாக்குவாதம்

இந்தநிலையில் சுங்ககேட்டிலிருந்து பா.ஜனதாவினர் நேற்று காலை ஊர்வலமாக வந்து திறக்கப்பட்டு இருந்த கடை உரிமையாளர்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து கடைகளை மூடி ஒத்துழைப்பு அளிக்குமாறு தெரிவித்தனர். குளித்தலை பஸ் நிலையம் பகுதியில் அவர்கள் வந்தபோது அங்கு வந்த தி.மு.க.வை சேர்ந்தவர்கள் கடைகளை யாரும் மூடவேண்டாம். கடைகளை திறக்குமாறு தெரிவித்தனர்.

இதனால் பா.ஜனதா மற்றும் தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த போலீசார் பா.ஜனதாவை சேர்ந்த ஒருவரை மட்டும் போலீஸ் ஜீப்பில் ஏற்ற முயன்றனர். இதை பார்த்த அங்கிருந்த பா.ஜனதா நிர்வாகிகள் ஒரு நபரை மட்டும் எதற்காக கைது செய்கிறீர்கள் என்று கேட்டு அனைவருமே கைதாவதாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பா.ஜனதாவை சேர்ந்த 24 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

இதுகுறித்து பா.ஜனதா நிர்வாகிகள் கூறுகையில், அமைதியான முறையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது தி.மு.க.வினர் கடையை திறக்க சொல்லி கடைக்காரர்களிடம் தெரிவித்தனர். அதற்கு உடந்தையாக போலீசாரும் பா.ஜனதாவினரை கைது செய்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும்பொழுது குளித்தலையிலோ அல்லது மாவட்டம் முழுவதுமாகவோ பா.ஜனதா சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.


Next Story